இலங்கை . March, 18 2019
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.
இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கு கண்டன அறிக்கையும் வாசிக்கப்பட்டது. இந்த பேரணி இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியது.
அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்த நிலையில், தமிழர்களுக்கு நீதி வேண்டும் என ஐ.நாவைக் கோரிய இந்த நீதி கோரும் போராட்டம் கண்ணீருடன் நிறைவுபெற்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.
அத்துடன் பொது அமைப்புகளும் இந்தப் பேரணிக்குத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இந்த எழுச்சிப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளனர்.